பூராயம்.
Thursday, January 10, 2013
Thursday, December 20, 2012
கடவுளுக்கோர் கடிதம்
எல்லாம் வல்லவராம்
எல்லாம் தெரிந்தவராம்
எல்லாம் செய்பவராம்
எங்கும் இருப்பவராம்
அகிலத்தில் வாழ்பவர்கள்
அப்படித்தான் சொல்லுகின்றார்
ஆனாலும் என்னிடத்தில்
அடுக்கடுக்காய் பலகேள்வி
மனச்சிறையில் இதைப்போட்டு
மறுவிக் கொள்ளாமல்
மனந்திறந்து கேட்டுவிட
மடலிதனை வரைகின்றேன்
அண்டத்தை ஆள்கின்ற
ஆண்டவன்உன் செயல்களுக்கு
காரணத்தை அறியாத
காரணத்தால் ஒருகடிதம்
அடுக்காத செயல்செய்த
அநியாயக் காரனைப்போல்
தலைமறைவாய்ப் போயிருக்கும்
தங்களுக்கே இக்கடிதம்
முறையாக அனுப்பிவைக்க
முகவரியும் தெரியாது
இரகசியமாய் அனுப்பிவைக்க
இருக்குமிடம் தெரியாது
திருமுகத்தை அனுப்பிவைக்க
திசைதெரியாக் காரணத்தால்
திறந்த மடலாகத்
திறக்கின்றேன் என்வழக்கை
மனிதரினைப் படைப்பதிலே
மகத்துவத்தைக் காட்டிவிட்டார்
மாநிலத்தோர் பேசுவது
மனதினிலே படியவில்லை
நன்றாக யோசித்து
நானிலத்தைப் பார்த்ததிலே
நடுநிலமை தவறியதாய்
நான்மனதில் உணர்கின்றேன்
அநியாயம் செய்வோரும்
அடித்துப் பிழைப்போரும்
அடுக்கு மாளிகையில்
அழகாக வாழ்கின்றார்
ஓயாமல் உழைப்போர்க்கு
ஒருநேர உணவில்லை
உழைக்காமல் வாழ்வோர்க்கு
உணவிருந்தும் பசியில்லை
அடுத்தவரை வதைத்தல்
அடுக்காத பாவமென்றால்
அதைநிதமும் செய்துநிற்கும்
ஆண்டவன்நீ பாவிதானே
இளவரசனாய் வளர்க்க
இல்லையென்று ஏங்கிநிற்க
இல்லாத வீட்டினிலே
இலையான்களாய் குழந்தை
எல்லார்க்கும் கொடுக்கின்ற
எண்ணம் கொண்டோர்க்கு
எதையும் கொடுக்காமல்
எதற்காக நீபடைத்தாய்?
நல்லவர்கள் நானிலத்தில்
நாள்முழுதும் மாய்வரென்றால்
நல்லவராய் வாழ்வதனால்
நமக்கென்ன லாபமிங்கே?
பணம்பத்தும் செய்யுமென்றால்
குணம்உள்ளோர் கதியென்ன?
மணச்சடங்குகூட இங்கே
பணச்சடங்காய் போனதேனோ?
கோபந் தணிப்பதற்கு
கோயிலுக்குப் போயிருந்தேன்
கோரக் குண்டுவீச்சில்
கோபுரத்தைக் காணவில்லை
அடுத்தவரைக் காக்காமல்
அமைதியாய் இருந்தவனே
அடியுனக்கு விழுந்தபின்னும்
அசையாமல் இருப்பதேனோ?
ஆண்டவனே உன்னிடத்தில்
அளவளாவத் தரகர்வைத்தார்
அர்ச்சகரின் துணையின்றி
அருகில்வர தடை போட்டார்
அநியாயம் அதிகரித்தால்
அவதாரம் எடுப்பதாக
அன்றொருநாள் சொன்னபேச்சு
அடிமனதில் பதிந்திருக்கு
அவதாரம் எடுக்கின்ற
அளவிற்கு அதர்மங்கள்
அகிலத்தில் இல்லையென்று
ஆண்டவன்நீ நினைத்தாயோ?
குண்டு வீச்சாலே
குலைநடுங்கிப் போனதனால்
பதுங்கு குளிக்குள்ளே
பதுங்கிக் கொண்டாயோ?
நீசக் காரர்கள்
நிலைகுலைந்து போவதற்கு
நீமீண்டும் பிறப்பெடுத்து
நிச்சயமாய் வரவேண்டும்
அந்தநாள் வெகுவிரைவில்
அமைந்துவிட வேண்டுமென்று
அடியேன்நான் உன்னிடத்தில்
அன்பாகக் கேட்கின்றேன்
Wednesday, April 6, 2011
மீள்வருமா?
Saturday, March 26, 2011
Thursday, March 3, 2011
Monday, October 25, 2010
Monday, September 6, 2010
Subscribe to:
Posts (Atom)