Thursday, December 20, 2012

கடவுளுக்கோர் கடிதம்

எல்லாம் வல்லவராம் எல்லாம் தெரிந்தவராம் எல்லாம் செய்பவராம் எங்கும் இருப்பவராம் அகிலத்தில் வாழ்பவர்கள் அப்படித்தான் சொல்லுகின்றார் ஆனாலும் என்னிடத்தில் அடுக்கடுக்காய் பலகேள்வி மனச்சிறையில் இதைப்போட்டு மறுவிக் கொள்ளாமல் மனந்திறந்து கேட்டுவிட மடலிதனை வரைகின்றேன் அண்டத்தை ஆள்கின்ற ஆண்டவன்உன் செயல்களுக்கு காரணத்தை அறியாத காரணத்தால் ஒருகடிதம் அடுக்காத செயல்செய்த அநியாயக் காரனைப்போல் தலைமறைவாய்ப் போயிருக்கும் தங்களுக்கே இக்கடிதம் முறையாக அனுப்பிவைக்க முகவரியும் தெரியாது இரகசியமாய் அனுப்பிவைக்க இருக்குமிடம் தெரியாது திருமுகத்தை அனுப்பிவைக்க திசைதெரியாக் காரணத்தால் திறந்த மடலாகத் திறக்கின்றேன் என்வழக்கை மனிதரினைப் படைப்பதிலே மகத்துவத்தைக் காட்டிவிட்டார் மாநிலத்தோர் பேசுவது மனதினிலே படியவில்லை நன்றாக யோசித்து நானிலத்தைப் பார்த்ததிலே நடுநிலமை தவறியதாய் நான்மனதில் உணர்கின்றேன் அநியாயம் செய்வோரும் அடித்துப் பிழைப்போரும் அடுக்கு மாளிகையில் அழகாக வாழ்கின்றார் ஓயாமல் உழைப்போர்க்கு ஒருநேர உணவில்லை உழைக்காமல் வாழ்வோர்க்கு உணவிருந்தும் பசியில்லை அடுத்தவரை வதைத்தல் அடுக்காத பாவமென்றால் அதைநிதமும் செய்துநிற்கும் ஆண்டவன்நீ பாவிதானே இளவரசனாய் வளர்க்க இல்லையென்று ஏங்கிநிற்க இல்லாத வீட்டினிலே இலையான்களாய் குழந்தை எல்லார்க்கும் கொடுக்கின்ற எண்ணம் கொண்டோர்க்கு எதையும் கொடுக்காமல் எதற்காக நீபடைத்தாய்? நல்லவர்கள் நானிலத்தில் நாள்முழுதும் மாய்வரென்றால் நல்லவராய் வாழ்வதனால் நமக்கென்ன லாபமிங்கே? பணம்பத்தும் செய்யுமென்றால் குணம்உள்ளோர் கதியென்ன? மணச்சடங்குகூட இங்கே பணச்சடங்காய் போனதேனோ? கோபந் தணிப்பதற்கு கோயிலுக்குப் போயிருந்தேன் கோரக் குண்டுவீச்சில் கோபுரத்தைக் காணவில்லை அடுத்தவரைக் காக்காமல் அமைதியாய் இருந்தவனே அடியுனக்கு விழுந்தபின்னும் அசையாமல் இருப்பதேனோ? ஆண்டவனே உன்னிடத்தில் அளவளாவத் தரகர்வைத்தார் அர்ச்சகரின் துணையின்றி அருகில்வர தடை போட்டார் அநியாயம் அதிகரித்தால் அவதாரம் எடுப்பதாக அன்றொருநாள் சொன்னபேச்சு அடிமனதில் பதிந்திருக்கு அவதாரம் எடுக்கின்ற அளவிற்கு அதர்மங்கள் அகிலத்தில் இல்லையென்று ஆண்டவன்நீ நினைத்தாயோ? குண்டு வீச்சாலே குலைநடுங்கிப் போனதனால் பதுங்கு குளிக்குள்ளே பதுங்கிக் கொண்டாயோ? நீசக் காரர்கள் நிலைகுலைந்து போவதற்கு நீமீண்டும் பிறப்பெடுத்து நிச்சயமாய் வரவேண்டும் அந்தநாள் வெகுவிரைவில் அமைந்துவிட வேண்டுமென்று அடியேன்நான் உன்னிடத்தில் அன்பாகக் கேட்கின்றேன்

NeoCounter